தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் கல்லூரி இயங்கி வருகிறது.இங்குள்ள செவிலியர் விடுதியில் நைட்டிங்கேல் சிலையை அனுமதியின்றி வைக்க பூமி பூஜை நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த நிலையில் செவிலியர் கண்காணிப்பாளர் ஜோஸ்பின் ஜென்னி என்பவர் சிலை வைப்பதற்கு ஒவ்வொரு மாணவிகளிடமும் பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் மதத்தைப் பரப்பும் நோக்கில் செயல்படுவதாக தெரிகிறது. இதற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் டாக்டர் எஸ்.பி.எம்.செல்வம் தலைமையில் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர் .மேலும் பல்வேறு இந்து அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனை அடுத்து முதல்வர் பாலாஜி நாதன் நைட்டிங்கேல் சிலை வைக்க இருந்த இடத்தில் பள்ளம் தோண்டியதை மூடி, சிலை வைக்க அனுமதி இல்லை என்று தெரிவித்தார்.
பரபரப்பான இந்த சூழ்நிலையில் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மொக்கராஜ் தலைமையில் அமைப்பினர் முதல்வர் பாலாஜி நாதனை சந்தித்து சிலை வைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தவும், இதற்கான ஏற்பாடுகளை செய்த கண்காணிப்பாளர் ஜோஸ்பின் ஜென்னி மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு அளித்தனர் .அதனைத்தொடர்ந்து கா.விலக்கு காவல்நிலையத்திலும் மனு அளித்தனர் .நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பல்வேறு அறப்போராட்டங்கள் நடைபெறும் என்று கூறினர். இதுகுறித்து டீன் பாலாஜி நாதன் கூறும்போது, மருத்துவமனை மற்றும் கல்லூரி வளாகத்தில் எந்த சிலையும் நிறுவப்படாது என்றும் அதற்கு தான் உத்தரவாதம் அளிப்பதாகவும் தெரிவித்ததை அடுத்து, அமைப்பினர் கலைந்து சென்றனர் .
இந்த நிகழ்வில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் டாக்டர் .எஸ் பி எம். செல்வம் ,நிர்வாகிகள் கனகராஜ், பகவதி ராஜ்குமார் ,கருப்பையா, முனீஸ்வரன் ,இளைஞரணி மனோஜ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்து எழுச்சி முன்னணி சார்பில் மாவட்ட செயலாளர் ராமராஜ் தலைமையில் அமைப்பினர் முதல்வர் பாலாஜி நாதனை சந்தித்து மனு அளித்தனர்.