அமைச்சர் செந்தில்பாலாஜி கைதைத் தொடர்ந்து, அமைச்சரவையில் புதிய மாற்றம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பு வகித்து வந்த இரண்டு துறைகள் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகியோருக்கு கூடுதலாக ஒதுக்கி தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில், அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதனைத் தொடர்ந்து இதயத்தில் 3 அடைப்புகள் உள்ளதால் அவருக்கு கட்டாயம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் கூறியுள்ளனர். நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப அவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்தநிலையில், வீட்டு வசதித் துறையை கவனிக்கும் அமைச்சர் முத்துசாமியிடம் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையை கூடுதலாக ஒப்படைக்கவும், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வசம் மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு ஆகிய துறைகள் ஒப்படைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கோப்பு ஆளுநருக்கு அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.