• Sat. Apr 26th, 2025

கடல்நீர் உட்புகுவதை தடுக்க புதிய தடுப்பணை

ByR. Vijay

Feb 21, 2025

நாகை மாவட்டம் உத்தமசோழபுரம் கிராமத்தில் கடல்நீர் உட்புகுவதை தடுக்க 49 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தடுப்பணை கட்டப்பட்டது. 12040 ஏக்கர் பாசன பரப்பில் ஈடுபடும் 20 கிராம் விவசாயிகள் பலனடைவார்கள் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

பூமி பூஜை, தடுப்பணை கட்டுமான பணி தொடக்கம்

நாகப்பட்டினம் மாவட்டம் உத்தமசோழபுரம் கிராமத்தில் வெட்டாற்றின் குறுக்கே கடல் நீர் உட்பகுவதை தடுக்க புதிய கடைமடை இயக்கு அணை கட்டுமானத்திற்கான பூமி பூஜை இன்று தொடங்கப்பட்டது. தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் ஆகியோர் 49 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் இயக்கு அணைக்கான பூமி பூஜை செய்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தனர்.

இந்த இயக்கு அணை கட்டுமான பணி நிறைவடைந்தால் மழைகாலங்களில் ஆண்டிற்கு 14000 கன அடி வெள்ளநீர் கடலில் கலப்பதை தடுப்பதுடன், 11 கிலோ மீட்டர் தொலைவிற்கு உபரிநீர் சுமார் 87.65 மில்லியன் கன அடி அளவிற்கு நீர் சேமிக்கப்படும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்தத் திட்டத்தினால் கரையோர கிராமங்களில் மண்வளம் மேம்பட்டு நிலத்தடி நீரின் உப்புத்தன்மை காலப்போக்கில் குறைந்து நிலத்தடி நீர் வளமும் பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.