விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்த்துறை தேவாங்கர் கலைக்கல்லூரி இணைந்து மொழி பெயர்ப்பு இலக்கியம் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. பன்னாட்டு புத்த திருவிழாவை தொடர்ந்து தமிழில் உள்ள பல நூல்கள் உலகில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பதற்காகவும், உலகின் சிறந்த நூல்களை தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பதற்காகவும், பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அது மட்டுமல்லாமல் உலக அளவில் சிறந்த இலக்கியங்களை மற்ற மொழிகளில் மொழிபெயர்ப்பதற்காக உலக முழுவதும் இந்த பணிகள் நடைபெறுவதை ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு இடமாக இருப்பது ஜெர்மன் நாட்டில் உள்ள பிராக்புர்ட்(Frankfurt) புத்தகத் திருவிழா.
அந்த புத்தகத் திருவிழாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு அரசின் சார்பாக அரங்கம் அமைக்கப்பட்டு உலகின் பல்வேறு மொழிகளில் தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்ப்பதற்கும் பல்வேறு உலக மொழிகளில் இருக்கக்கூடிய சிறந்த இலக்கியங்களை தமிழ்மொழியில்; கொண்டுவதற்கான பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இக்கருத்தரங்கின் மூலம் மொழி பெயர்ப்பு இலக்கியங்களுடைய தேவை, மொழிபெயர்ப்பு இலக்கியங்களுக்கான சூழல் எப்படி இருக்கிறது. தமிழின் அறிய செல்வங்களை மற்ற மொழிகளுக்கு எப்படி மொழி பெயர்ப்பது, அதற்கான தற்கால சூழல் என்ன, எதிர்காலப் போக்குகள்; எப்படி இருக்கும். மொழிபெயர்ப்பு இலக்கிய துறையில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் என்ன என்பதை மாணவச் செல்வங்களுக்கு எடுத்துச் செல்வதுதான் நோக்கம்.
ஒரு மொழி என்பது பல்வேறு மொழிகளின் உடைய தாக்கங்களை, பல்வேறு பண்பாடுகள் சொல்லக்கூடிய செய்திகளை உள்வாங்குவதற்கும், அதனுடைய அறிவை பெற்று தனக்குள்ளே வைத்து அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்கும் ஒரு மொழி தயாராகவும், தகவமைப்போடும் இருக்க வேண்டும்.
மொழிபெயர்ப்பு துறையில் மிக பெரிய முன்னேற்றங்களை இந்த தகவல் தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு தந்து கொண்டிருக்கின்றது. இவை வழங்கக்கூடிய வேலை வாய்ப்புகள் மிகப்பெரிய அளவில் இருக்கின்றன. எனவே அந்த வாய்ப்புகள் குறித்து நீங்கள் புரிந்து கொள்வதற்கும் தேடுவதற்கும் இந்த கருத்தரங்கு உங்களுக்கு உத்வேகத்தை தரும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சாகித்திய அகாதெமி விருதாளர் .சோ.தர்மன், தேவாங்கர் கலைக்கல்லூரி முதல்வர்(பொ) முனைவர் உமாராணி, கல்லூரி தமிழ்த்துறை தலைவர் முனைவர் இரா.ஸ்டீபன் பொன்னையா, கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் எஸ்.ஐ.ஜெயந்தி உட்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.