கன்னியாகுமரியில் 150 அடி உயர ராட்சத கம்பத்தில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் டெல்லி மற்றும் கார்கில் போர் நடந்த இடத்தில் இருப்பது போல் கன்னியாகுமரியிலும் மிக உயரமான தேசிய கொடி கம்பம் அமைப்பதற்கு மத்திய அரசிடம் விஜயகுமார் எம்.பி. வலியுறுத்தி வந்தார். அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து கன்னியாகுமரியில் ராட்சத தேசியக்கொடி கம்பம் அமைப்பதற்கு விஜயகுமார் எம்.பி. தனது பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில் இருந்து ரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.
இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மகாதானபுரம் நான்கு வழி சாலையில் அமைந்துள்ள ரவுண்டனா சந்திப்பில் ரூ.75 லட்சம் செலவில் 150 அடி உயர ராட்சத தேசியக் கொடி கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் பறக்க விடப்பட்டுள்ள தேசியக்கொடியின் அளவு 32 அடி அகலமும் 48 அடி நீளமும் ஆகும். இந்த 150 அடி உயர ராட்சத தேசிய கொடிக் கம்பத்தின் திறப்பு விழா இன்று காலை 10 மணிக்கு கன்னியாகுமரி மகாதனபுரம் நான்கு வழிச்சாலை ரவுண்டானா சந்திப்பு பகுதியில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத், விஜயகுமார் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கொடிக்கம்பத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். கட்சி பாகுபாடின்றி அனைத்து கட்சியினரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்னர் என்பது குறிப்பிடத்தக்கது.