கோவை தேசிய கண் தான விழிப்புணர்வு இருவார விழாவை முன்னிட்டு, இந்திய மருத்துவச் சங்கம் தமிழ்நாடு கிளை மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய “கண்ணொளி தானம் – கண் தானம் செய்வோம், ஒளி நிறைந்த வாழ்வை வழங்குவோம்” என்ற தலைப்பிலான சிறப்பு கருத்தரங்கம் மற்றும் பயிற்சிப் பட்டறை கோவை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.

மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இந்நிகழ்வில், கண் தானத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும், கண் தான நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் பல்வேறு அமர்வுகள் இடம்பெற்றன.
நிகழ்ச்சியின் தொடக்கமாகப் பதிவு மற்றும் கண் தான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, கருவிழிப் பார்வையின்மை பாதிப்புகள், கண் தான நடைமுறைகள், கண் வங்கி சேவைகள், கண் எடுப்பதற்கான உடற்கூறியல் வழிமுறைகள் மற்றும் கண் தானம் குறித்த தவறான நம்பிக்கைகள் குறித்து சிறப்பு மருத்துவர்களால் விரிவான விளக்கவுரைகளும் கலந்துரையாடல்களும் நடைபெற்றன.

மேலும், துயரத்தில் இருக்கும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மனநல ஆலோசனைகள் வழங்கி கண் தானத்திற்கு ஒப்புதல் பெறுவது குறித்த வழிமுறைகளும் கற்றுத்தரப்பட்டன. மதியத்திற்குப் பின், கண் எடுக்கும் தொழில்நுட்பங்கள் தொடர்பான நேரடிச் செயல்முறைப் பயிற்சி நடத்தப்பட்டது. இடைவேளையின் போது மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கண் தான விழிப்புணர்வு நாடகமும் அரங்கேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஐ.எம்.ஏ தமிழ்நாடு மாநிலத் தலைவர் டாக்டர் பி. ஸ்ரீதர், கோவை மருத்துவக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் டாக்டர் எம். கீதாஞ்சலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் ஐ.எம்.ஏ கோவை தலைவர்டாக்டர் கோஷல் ராம், ஐ.எம்.ஏ கோவை கௌரவச் செயலாளர் டாக்டர் டி. பரமேஸ்வரன், பொருளாளர் பாலமுருகன்,
ஐ.எம்.ஏ மகளிர் மருத்துவர் பிரிவு தலைவர்டாக்டர் அனுஷா கோஷல் ராம், ஐ.எம்.ஏ
தமிழ்நாடு மாநிலத்தின் தலைவர் (தேர்வு 2026) டாக்டர் ஏ. கே. ரவிகுமார் தலைமை விருந்தினராகவும், மற்றும் டாக்டர் சி. பி. சண்முக சுந்தரம், தமிழ்நாடு கண் மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் வி. ஆர். விஜயராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.








