கடந்த ஆண்டு ஜூலை 30-ந்தேதி அனுப்பப்பட்ட பெர்சவரன்ஸ் விண்கலம், கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் ‘ஜெசேரோ பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படும் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த குறிப்பிட்ட பள்ளத்தாக்கு பகுதியில் நீர்நிலைகள் இருந்ததற்கான ஆதாரம் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதியதால், ஆய்வுக்காக நாசா இந்த பொகுதியை தேர்ந்தெடுத்தது.
கடந்த சில தினங்களுக்கு முன் ரோவர் கருவி மூலம் எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் மலைகள், பாறைகள், படிமங்களின் புகைப்படங்கள் இதுவரை இல்லாத அளவு துல்லியமான தரத்தில் காணமுடிந்தது.
இந்த நிலையில் ரோவர் கருவியில் பொருத்தப்பட்டிருக்கும் மைக்ரோஃபோன் மூலம் செவ்வாய் கிரகத்தில் பதிவு செய்யப்பட்ட சத்தங்களை பூமிக்கு அனுப்பி வருகிறது. செவ்வாய் கிரகத்தில் சரளைக் கற்கள் மீது ரோவர் ஏறும்போதும், அங்கிருக்கும் கற்களை ரோவர் கருவி கதிர்வீச்சு மூலமாக உடைத்த போதும் பதிவான சத்தம் பூமிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு செவ்வாய் கிரகத்தில் இருந்து அனுப்பப்பட்ட 5 மணி நேரத்திற்கும் மேலான சத்தங்களை பதிவு செய்து வைத்திருப்பதாகவும், இவை அனைத்தும் அடுத்த கட்ட ஆய்விற்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் நாசா தெரிவித்துள்ளது.