• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

விரிவாக்கம் செய்யப்படுமா நாகர்கோவில் ரயில்வே முனையம்..!

Byத.வளவன்

Jan 22, 2022

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவிலில் அமைந்துள்ள நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் 60 கோடி வருமானம் உள்ள என் எஸ் ஜி-3 வகை ரயில் நிலையம். தினசரி இங்கிருந்து சராசரியாக 7583 பயணிகள் பயணிகள் பயணம் செய்வதால் அதிக வருவாயுடன் கோட்டத்தில் முன்னணி ரயில் நிலையமாக திகழ்கின்றது.
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில்களை நிறுத்தி வைக்கவும், பராமரிப்பு செய்யவும் கூடுதல் வசதிகள் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் ரயில் நிலையத்தில் போதிய நடைமேடைகள் இல்லாத காரணத்தால் நாகர்கோவிலுக்கு வரும் ரயில்கள் ரயில்நிலையத்துக்கு வெளியே சிக்னல் கிடைக்காமல் சுமார் அரை மணி முதல் ஒரு மணிவரை நிறுத்தி வைக்கப்பட்டு பயணிகளை அவதிக்கு உள்ளாக்குகின்றன. குறிப்பாக திருநெல்வேலி மார்க்கத்திலிருந்து நாகர்கோவிலுக்கு வரும் ரயில்கள் நடைமேடை காலியாக இல்லாத காரணத்தால் வெளியே தோவாளை ரயில் நிலையம் தாண்டியவுடன் அவுட்டர் சிக்னலில் நிறுத்தி வைக்கப்பட்டு, நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் மார்க்கம் பயணிக்கும் ரயில்கள் புறப்பட்டு சென்ற பிறகே நடைமேடைக்கு கொண்டு வரப்படுகின்றன. இவ்வாறு வருகின்ற காரணத்தால் மேற்கு மாவட்டத்தில் உள்ள பயணிகள் இணைப்பு ரயிலாக எந்த ஒரு ரயிலையும் பயன் படுத்த முடியாத சூழல் உள்ளது.
ரயில்வே துறை நாகர்கோவில் ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்ய 2006-07 ம் ஆண்டு முடிவு செய்தது. இரண்டு கட்டங்களாக பணிகள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு முதல் கட்ட பணிகள் முடிவு பெற்றன. ஆனால் இரண்டாம் கட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்டு இதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இரண்டாவது கட்ட பணிகளில் இரண்டு 24 பெட்டிகள் கொண்ட புதிய நடைமேடைகள், ஆறு புதிய லைன்கள் மற்றும் முதல் கட்ட பணியில் முடிக்காமல் உள்ள நடைமேடை 1பி போன்றவை அடங்கும். நிலம் கையகப்படுத்துதல், நிதி பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்களுக்காக இரண்டாவது கட்டப் பணி கிடப்பில் போடப்பட்டது.
பின்னர் மத்திய இணை அமைச்சராக பொன்.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்ற பின்பு ரயில்வே அமைச்சரை நேரடியாக சந்தித்து விரிவாக்கம் குறித்த கோரிக்கையை வைத்தார். இதனால் 2014-ம் வருடம் ஜூலை மாதம் பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு நடைபெற்ற ரயில் பட்ஜெட் விவாதத்தில் பேசிய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா கன்னியாகுமரி ரயில் நிலையம் முனைய ரயில் நிலையமாகவும், நாகர்கோவில் ரயில்நிலைய முனைய வசதி விரிவாக்கம் வேகமாக செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி நாகர்கோவில் ரயில் நிலையத்தில் முனைய விரிவாக்க திட்டம் நாகர்கோவில் – மணியாச்சி இருவழிபாதை திட்டத்தில் கீழ் செய்ய இந்த திட்டத்துடன் இணைக்கப்பட்டு செயல்வடிவம் கொடுக்கப்பட்டது.

நடைமேடை

தற்போது நாகர்கோவில் ரயில் நிலையத்தில் 550 மீட்டர் அதாவது 24 பெட்டிகள் நீளத்தில் மூன்று நடைமேடைகளும், 18 பெட்டிகள் கொண்ட நடைமேடை 1ஏ யும் சேர்த்து நான்கு நடைமேடைகள் உள்ளன. முனைய விரிவாக்க திட்டத்தின் கீழ் புதிதாக 625 மீட்டர் அதாவது 26 பெட்டிகள் கொண்ட நடைமேடைகள் இரண்டு அமைக்கப்பட உள்ளன. இந்த நடைமேடை தற்போது ஸ்டேபளிங் லைன்கள் உள்ள பகுதியில் உள்ள நான்கு ஸ்டேபளிங் லைன்களை அகற்றி விட்டு அந்த இடத்தில் புதிதாக நடைமேடை அமைய உள்ளது. இது மட்டுமில்லாமல் தற்போது உள்ள நடைமேடை மூன்று எண்ணிக்கையும் 26 பெட்டிகள் நிற்கும் அளவுக்கு நீளம் அதிகரிக்கப்பட இருக்கிறது. இவ்வாறு பணிகள் நிறைவு பெற்றால் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நடைமேடை 1ஏ யும் சேர்த்து ஆறு நடைமேடைகள் பயணிகள் பயன்பாட்டிற்காக இருக்கும்.
பிட்லைன்
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளுக்கு அடியில் பிரேக், வீல், ஷாக் அப்சர்வர் (ளாழஉம யடிளழசடிநச) ஆய்வு மற்றும் வழக்கமான பராமரிப்பு வேலை செய்வதற்கு என தற்போது 24 பெட்டிகள் நீளம் கொண்ட இரண்டு பிட்லைன்களும், 18 பெட்டிகள் கொண்ட ஒரு பிட்லைன்களும் என மொத்தம் மூன்று பிட்லைன்கள் உள்ளன. இந்த பிட்லைன்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே புதிய நெடுந்தூர ரயில்கள் இயக்கப்படும். அதிக பிட்லைன்கள் இருந்தால் அதிக ரயில்கள் இயக்கப்படும். தற்போது இந்த மூன்று பிட்லைன்களில் வைத்து தற்போது நாகர்கோவில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் பராமரிக்கப்படுகின்றன. விரிவாக்கும் திட்டத்தின் கீழ் இனி கூடுதலாக 625 மீட்டர் நீளத்துக்கு அதாவது 26 பெட்டிகள் நீளம் கொண்ட இரண்டு பிட்லைன்கள் அமைக்கப்பட உள்ளது. இது மட்டுமில்லாமல் தற்போது உள்ள மூன்று பிட்லைன்களும் 625 மீட்டர் நீளத்துக்கு அதிகரிக்கப்பட இருக்கிறது.
ஸ்டேபின் லைன்கள்
பராமரிப்பு முடிந்து வரும் காலி ரயில் ரயில்களை அதாவது ரயில் பெட்டிகளையும், பராமரிப்பு இல்லாத ரயில்களான நாகர்கோவில் – பெங்களூர், நாகர்கோவில் – மங்களூர், நாகர்கோவில் – சென்னை போன்ற ரயில்களை நிறுத்தி வைப்பதற்கு இந்த ஸ்டேபின் லைன்கள் தேவைப்படுகின்றன. தற்போது நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நான்கு ஸ்டேபின் லைன்கள் உள்ளன. நாகர்கோவில் விரிவாக்க திட்டத்தின் கீழ் இந்த நான்கு ஸ்டேபின் லைன்கள் நடைமேடையாக மாற்றப்பட உள்ளன. இதற்கு மாற்று ஏற்பாடாக ஒன்பது புதிய ஸ்டேபின் லைன்கள் அமைக்கப்பட உள்ளன. அதன்படி பணிகள் முடிவு பெற்றால் பழைய நான்கு ஸ்டேபின் லைன்கள் புதிதாக ஆறு ஸ்டேபின் லைன்கள் என மொத்தம் பத்து ஸ்டேபின் லைன்கள் இருக்கும். இதுமட்டுமில்லாமல் வாகன நிறுத்துமிடம், புதிய நடைமேடை மேம்பாலம், கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை, சிக்லைன், குட்ஸ்லைன் போன்ற வசதிகளும் அமைக்கப்பட இருக்கின்றன.

நாகர்கோவில் ரயில் நிலைய விரிவாக்கம் பணிகள் முடிக்கப்பட்டு விட்டால் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியிலிருந்து மதுரை, சென்னை வழியாக இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்களுக்கு ரயில்கள் அறிவிக்கப்பட்டு இயக்கப்படும். இது மட்டுமில்லாமல் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொச்சுவேலி, மதுரை, திருச்சி, சென்னை போன்ற இடங்களிலிருந்து இயக்கப்பட்டு வரும் ரயில்கள் குமரிக்கு நீட்டிப்பு செய்ய வசதி வாய்ப்புகள் கிடைக்கும். இவ்வாறு இயக்கப்பட்டால் குமரி மாவட்ட பயணிகள் யாரும் நெடுந்தூரங்களுக்கு பயணம் செய்ய திருவனந்தபுரம் அல்லது சென்னை செல்லாமல் நேரடியாக இங்கிருந்து பயணம் செய்யலாம். இவ்வாறு இங்கிருந்து பயணம் செய்தால் குமரி நமது மாவட்ட ரயில் நிலையங்கள் அதிக வளர்ச்சி பெறும்.