மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் மைக் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளதால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அக்கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடுகிறது என அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனை தொடர்ந்து பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
கூட்டணி, தொகுதி பங்கீடு என அரசியல் களமே பரபரப்பாக இயங்கிகொண்டிருக்கும் நிலையில் சில கட்சிகளுக்கு சின்னம் இறுதி செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. அந்த வகையில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டுள்ளது.
அதற்கு மாறாக ஒலிவாங்கி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்திருந்த நிலையில், மேலும் இரண்டு சின்னங்களை கேட்டு நாம் தமிழர் கட்சி, இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகியது. இருப்பினும் சின்னம் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒலிவாங்கி சின்னத்தில் போட்டியிட நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. இந்நிலையில் ஒலிவாங்கி சின்னத்தை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.