மதுரை மாவட்டம் செக்காணூரணி அருகே கிண்ணிமங்கலத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. கடையில் பரமேஸ்வரன், ஞானசேகரன் ஆகிய இரண்டு பேர் விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுபாட்டில்களை வாங்குவது போல் நடித்து கடையின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் விற்பனையாளரை பட்டா கத்தியை காட்டி மிரட்டி, கடையிலிருந்த பணம் ரூ.52 ஆயிரத்தை கொள்ளையடித்து தப்பியோடிவிட்டனர்.
மேலும் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக கடையின் வெளியே பொருந்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமராக்களை உடைத்து சேதப்படுத்தியும் உள்ளனர். கொள்ளையர்கள் அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் பணத்துடன் தப்பியுள்ளனர்.
இதையறிந்த, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து கொள்ளையடித்து தப்பி சென்ற குற்றவாளிகளை தேடி வருகின்றனர் போலீசார்.
இந்த சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் ; குமார்