புதுச்சேரி முத்தியால்பேட்டையில் தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் மர்ம பொருள் வெடித்து சிதறியதால் வீடு தரைமட்டமானது. இந்த விபத்தில் தாய், மகள் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
புதுச்சேரி, முத்தியால்பேட்டை, அங்காளம்மன் நகர், முதலாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயசங்கர் (46). தனியார் ஊழியர். இவருக்கு எழிலரசி (43) என்ற மனைவியும், 12 வயதில் மகளும் உள்ளனர். நேற்றிரவு மனைவி, குழந்தைகளுடன் ஜெயசங்கர் வீட்டில் தூங்கினார்.
அதிகாலையில் எழுந்த அவர், கடைக்கு சென்றுள்ளார். இதனிடையே காலை 6.30 மணியளவில் அவரது வீட்டின் முன்பக்க அறையில் பயங்கர வெடி சப்தம் கேட்டது. இதை தொடர்ந்து வீட்டின் முன்பக்க அறையில் இருபக்க சுவர் இடிந்து விழுந்தது.
வீட்டை ஒட்டி வசிக்கும் காய்கறி வியாபாரியான ஜோதி (55) உள்ளிட்ட மேலும் சிலரது வீடுகளிலும் விரிசல் ஏற்பட்டது. 1 கிமீ தூரம் வரை பயங்கர சத்தம் கேட்கவே அப்பகுதியில் வீடுகளில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தவர்கள் பதற்றத்துடன் வெளியே ஓடிவந்து ஜெயசங்கர் வீட்டின்முன்பு திரண்டனர். முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டனும் வந்து விசாரித்தார்.
அப்போது சிலிண்டர் வெடித்ததாகவும், பிரிட்ஜ் வெடித்து விட்டதாகவும் தகவல் பரவியது. இருப்பினும் வீட்டின் முன்பகுதி அறை அங்கிருந்த பொருட்களுடன் தரைமட்டமாகி கிடந்ததோடு வீட்டிற்குள் யாரும் செல்ல முடியாதபடி இடிந்து விழும் அபாய தன்மையில் இருந்ததால் பாதுகாப்பு கருதி யாரும் உள்ளே செல்லவில்லை.