தமிழக அரசு பெட்ரோல் விலையை குறைப்பதற்காக வரியிலிருந்து 3 ரூபாய் வரை குறைத்துள்ளது. ஆனால் மத்திய அரசு பெட்ரோ, டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை குறைக்காமல் சாமானிய மக்களின் தலையில் கூடுதல் சுமைகளை சுமத்தி வருகிறது. இதனைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவியான முத்துலட்சுமி பங்கேற்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கூட்டத்தில் முத்துலட்சுமி பேசியதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெட்ரோல் விலையை 3 ரூபாய் வரை குறைத்துள்ளது. ஆனால் மத்திய அரசு வரலாறு காணாத அளவிற்கு கேஸ் விலையை உயர்த்தியுள்ளது. இது அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் பெண்களின் குடும்பங்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. மத்திய மோடி அரசு மக்கள் மீது சுமையை சுமத்தி வருவதாக கண்டனம் தெரிவித்தார்.
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டியே தீருவேன் என திட்டவட்டமாக கூறி வருகிறது. தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க களத்தில் இறங்கி நிற்போம். என் கணவர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் ஒரு அரசு அதிகாரி கூட மேகதாது பக்கம் வந்திருக்காங்க மாட்டார்கள். ஏன் என்றால் வீரப்பன் என்ற மனிதர் இருந்திருந்தால் ஒருத்தரும் உயிரோடு திரும்பி இருக்கமாட்டீர்கள். வீரப்பன் என்ற மனிதன் இல்லாததால் தான் தமிழர்களை அடித்துவிரட்டும் அளவிற்கு தைரியம் வந்துவிட்டது என ஆவேசமாக பேசினார்.