உசிலம்பட்டி அருகே பொருட்காட்சியில் பணியாற்றிய வடமாநில தொழிலாளியை படுகொலை செய்து, உடலை கல்லை கட்டி கிணற்றில் வீசிய கொடூரம் – கிணற்றிலிருந்து உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் திருச்சியைச் சேர்ந்த ரவி மற்றும் விருதுநகரைச் சேர்ந்த கருப்பசாமி என்ற இருவரும் இணைந்து கடந்த டிசம்பர் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை பொருட்காட்சி நடத்தியுள்ளனர்.
இந்த பொருட்காட்சி முடிந்து பொருட்காட்சி இயந்திரங்களை அவிழ்க்கும் பணி நடைபெற்று வருகிறது., இந்த பொருட்காட்சியில் பணியாற்றிய 25 பேரில் 15 பேர் பிகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த பொருட்காட்சி நடத்த இடத்தின் அருகே உள்ள கிணற்றில் ஆண் பிணம் மிதப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தீயணைப்புத்துறை மற்றும் போலீசார் கிணற்றிலிருந்து உடலை மீட்டு நடத்திய விசாரணையில் இந்த பொருட்காட்சியில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தீபக்குமார் என்ற இளைஞர் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த இளைஞரை படுகொலை செய்து அவரது உடலை கல்லைக் கட்டி கிணற்றில் வீசியிருந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்த நிலையில் தீபக்குமாரை கொலை செய்து கிணற்றில் வீசியது யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு தலைமையிலான போலீசார் தீபக்குமாருடன் பணியாற்றிய ஊழியர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக எழுமலை காவல் நிலைய போலீசார் தீபக்குமாரின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இந்த படுகொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.