காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற எம்பி சந்தோக் சிங் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7-ம் தேதி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியில் தொடங்கினார். இந்த யாத்திரை தமிழகம், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களின் வழியே கடந்து சென்றுள்ளது.
கடந்த 6-ம் தேதி மீண்டும் ஹரியானாவுக்குள் யாத்திரை நுழைந்தது. லூதியானாவில் இன்று காலை தொடங்கிய இந்த யாத்திரை, தொடர்ந்து, பஞ்சாப்பில் நடந்து வருகிறது. இதில், காங்கிரஸ் கட்சியின் எம்பி சந்தோக் சிங் என்பவர் இன்று காலை கலந்து கொண்டார். பில்லார் பகுதியில் உள்ள குஷ்த் ஆசிரமத்தில் இருந்து ராகுல் காந்தியுடன் வெளியே வந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனை தொடர்ந்து, உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் பக்வாராவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பாதயாத்திரை தற்காலிக ரத்து செய்யப்பட்டது. ராகுல் காந்தி உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.