• Fri. Apr 19th, 2024

கோவில்பட்டி ஓட்டலில் பரோட்டா சாப்பிட்ட தாய்-மகள் மரணம்..!

Byவிஷா

Oct 13, 2021

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஓட்டலில் பரோட்டா சாப்பிட்ட தாய்-மகள் உடல்நிலை பாதித்து மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இருவரின் மரணத்திற்கும் பரோட்டா சாப்பிடது தான் காரணமா அல்லது சாப்பாடு விஷமாகியதா அல்லது வேறு காரணமா என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். பரோட்டோ உடல் நலத்திற்கு மிகவும் கேடான உணவு. மற்ற உணவுகளைவிட பரோட்டோ செரிமானம் ஆவதற்கு மிக அதிக நேரம் ஆகும். வயதானவர்கள், செரிமான பிரச்சனை உள்ளவர்கள் பரோட்டோ சாப்பிடுவது நல்லதல்ல என்பது பொதுவான கருத்தாக இருந்து வருகிறது. ஏனெனில் மைதா சேர்த்த உணவுகளுக்கு கிளைசெமிக் அளவீடு அதிகம்.


அதாவது, சாப்பிட்டவுடன், விரைவில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும். எனவே, சர்க்கரை நோயாளிகள் தடை விதிக்கவேண்டிய முக்கிய உணவு பரோட்டா. மைதாவைப் பட்டுப்போல மென்மையாக்க பயன்படும் அல்லோக்ஸான்’ எனும் வேதிப்பொருள், நேரடியாக கணையத்தைத் தாக்கி, சர்க்கரைநோயை உண்டாக்கலாம்.


இன்றைக்கு சர்க்கரைநோய், உடல் பருமன் போன்ற தொற்றா நோய்கள் அதிகரித்திருப்பதற்கு, பல்வேறு காரணங்களோடு, பரோட்டாவையும் ஒரு காரணமாகச் சொல்லலாம். சத்துகள் ஏதுமில்லாத, வெற்று கலோரிகளை மட்டுமே கொடுக்கும் மைதாவின் குழந்தையான பரோட்டா, உடல் எடையைக் கூட்டும். அதுவும் குழந்தைப் பருவம் முதலே பரோட்டாவுக்கு ரசிகராக இருப்பவர்களுக்கு இள வயது உடல் பருமன் நிச்சயம். எண்ணெயில் பொரித்த மைதா சார்ந்த உணவுகள், கெட்டக் கொழுப்பை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இதய நோய்களையும் உண்டாக்குகிறது.


இப்படி பரோட்டோவின் தீமைகள் அடுக்க காரணம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஓட்டலில் பரோட்டா சாப்பிட்ட தாய்-மகள் உடல்நிலை பாதித்து மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் அனைவரையும் அதிர வைத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்பன் நகரைச் சேர்ந்த இளங்கோவன் மனைவி கற்பகம் (33). இவர்களது மகள் தர்ஷினி (7). கற்பகம் நேற்று இரவு 9 மணி அளவில் தனது மகள் தர்ஷினியுடன் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார். அங்கு இருவரும் பரோட்டா சாப்பிட்டுள்ளனர். பின்னர் அருகே உள்ள கடையில் குளிர்பானம் வாங்கி அருந்தியுள்ளனர். தொடர்ந்து இருவரும் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது இருவருக்கும் திடீரென மயக்கம் வந்துள்ளது. இதைப்பார்த்த உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் கற்பகம் மற்றும் தர்ஷினியை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.


அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இருவரது உடல்நிலையும் மோசமடைந்ததால் மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்தனர். இதையடுத்து தாயும் மகளும் ஆம்புலன்சில் பாளையங்கோட்டைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அவர்களின் உடல்களை பரிசோதனைக்காக மீண்டும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். தகவலறிந்து மருத்துவமனை வளாகத்தில் தங்கப்பநகரைச் சேர்ந்த கற்பகத்தின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் திரண்டனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு என்ன காரணம் என்பது தெரியவரும். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பரோட்டா சாப்பிட்டு தாயும் மகளும் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பரோட்டோ சாப்பிட்ட பலர் உடல் நலம் பாதித்து இறந்த சம்பவங்கள் அண்மைகாலங்களில் நடந்துள்ளன. பாஸ்ட்புட் விஷமாக மாறியும் பலர் இறந்துள்ளனர். எனவே பரோட்டோ உள்பட மைதாவில் செய்யும் உணவை தவிர்ப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *