மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் கார் மீது, பா.ஜ.க. நிர்வாகிகள் செருப்பு வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் குறித்து மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை-மகா. சுசீந்திரன் பேசியதாக ஆடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதில் “நான் மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் உடலுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு, மாஸ் ஆக-கிராண்ட் ஆக இருக்க வேண்டும். இந்த விஷயத்தை எப்படி அரசியல் பண்ணுவது? என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். நிச்சயமாக அரசியல் பண்ணி விடுவோம். மதுரை விமான நிலையத்துக்கு எத்தனை பேர் இருந்தாலும் அழைத்து வாருங்கள்” என்று அண்ணாமலை பேசுவதாக குரல் பதிவாகி உள்ளது. எனவே மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மீதான செருப்பு வீச்சு தாக்குதல், திட்டமிட்டு நடத்தப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையே சமூக வலைதளத்தில் வெளியான ஆடியோவுக்கு, மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.