மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் அடையாள அட்டைகளை பெற்று சென்றனர்.
இந்நிலையில் உசிலம்பட்டி பகுதியில் இன்று மின் தடை செய்யப்பட்டுள்ள சூழலில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் வெளிச்சத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட அவல நிலை உருவாகியது.
தொடர்ந்து மின் தடை குறித்து ஏற்கனவே அறிந்த அதிகாரிகள் மருத்துவ முகாமை மாற்றுத் தேதியில் நடத்தி இருக்கலாம் எனவும், மின்சாரம் இல்லாததால் பெரும் சிரமத்தை சந்திததாகவும், ஒரு சில பரிசோதனைகள் மட்டுமே இந்த முகாமில் நடத்தப்படுவதாகவும், பல்வேறு பரிசோதனைக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுரை வழங்கி வருவதால் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.