புதுக்கோட்டை அறிஞர் அண்ணா சிலைக்கு அவரது 57 வது நினைவு நாளை முன்னிட்டு மதிமுகவினர் முதல் மாலையாக அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் மட்டுமல்லாது நினைவு நாளையும் திராவிட கட்சிகள் போற்றி கொண்டாடி வருகின்றன. அந்த வகையில் திராவிட கட்சிகளின் தாய்க்கழகமான திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு திராவிட கட்சிகளும் இந்த பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அந்த வகையில் இன்று புதுக்கோட்டையில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பதற்கு ஒவ்வொரு கட்சியினருக்கும் காவல்துறையின் சார்பில் நேரம் ஒதுக்கி கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவிக்க காலை 9 மணிக்கு நேரம் ஒதுக்கி கொடுத்து இருந்த நிலையில் ஒன்பதரை மணிக்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி தலைமையில் வழக்கறிஞர் ராஜா ஆதிமூலம், அரசி கருணா, மாமன்ற உறுப்பினர் காசிலிங்கம் உள்ளிட்ட தொண்டர்களும் கட்சியின் முக்கிய பிரமுகர்களும் மதிமுக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு முதல்மாலை அணிவித்து அறிஞர் அண்ணாவின் நினைவு போற்றி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மற்ற கட்சியினரும் மாலை அணிவிக்க தயாராகி வருகின்றனர்.










