தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு அரசு தரப்பில் திருமண உதவி வழங்கப்பட்டு வருகிறது.அவ்வகையில் கடந்த ஆட்சி காலத்தில் பத்தாம் வகுப்பு முடித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக 25 ஆயிரம் ரூபாய், நான்கு கிராம் தங்கம் வழங்கப்பட்டது.அதனைப் போலவே பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் ஒரு பவுன் தங்கம் வழங்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து தற்போது ஏழை ஜோடிகளுக்கு அரசு இலவசமாக திருமணம் செய்து வைத்து வருகிறது.
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் திருக்கோவில்களுக்கு சொந்தமான திருமண மண்டபங்களில் இலவசமாக திருமணம் நடத்தும் திட்டம் அரசு தரப்பில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண பதிவு கட்டணம் கிடையாது.திருக்கோவில்களுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்திற்கான பராமரிப்பு செலவு மட்டுமே வசூல் செய்யப்படும்.இந்நிலையில் தமிழக கோவில்களில் தற்போது ஏழை ஜோடிகளுக்கு அக்டோபர் மாதத்தில் இலவச திருமணம் நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி ஒவ்வொரு மண்டலத்திலும் 25 ஏழை ஜோடிகளை தேர்வு செய்து அங்கீகரிக்கப்பட்ட திட்ட செலவின்படி திருமணம் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் மணமக்களின் விவரத்தை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து மண்டல இணை ஆணையருக்கு அனுப்ப வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.