



தமிழ்நாட்டிலேயே அதிகப்படியான வாடிவாசலை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம். இந்த மாவட்டத்தில் தான் அதிகப்படியான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஜனவரி 4ம் தேதி தமிழ்நாட்டின் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தொடங்கியது. இதனையடுத்து தொடர்ந்து வடமாடு, மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு என போட்டிகள் தினசரி நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை மாவட்டம் மாங்கனாம்பட்டி வீரமாகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு இன்று காலை 8-30 மணிக்கு தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்னதாக ஜல்லிக்கட்டு உறுதி மொழியை அமைச்சர் மெய்யநாதன் வாசிக்க வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமன்றி மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 650 காளைகளும் 300 காளையர்கள் பங்கேற்றுள்ளனர். வாடிவாசலில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்க்கப்படும் காளைகள் துள்ளி குதித்து சீறிப் பாய்ந்து வருவதை காளையர்கள் மல்லுக்கட்டி தழுவி வருகின்றனர்.

இந்த ஜல்லிக்கட்டில் சிறந்த முறையில் காளைகளை தழுவிய காளையர்களுக்கும் நீண்ட நேரம் வீரர்களை திணறடித்து களமாடும் காளைகளுக்கும் சைக்கிள் கட்டில் பிரோல் டேபிள் சில்வர் பாத்திரங்கள் பேன் மிக்ஸி குக்கர் வெள்ளி காசு தங்க காசு ரொக்கப்பணம் உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.
காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே வாடிவாசலுக்கு அனுமதிக்கப்பட்டது. அதேபோல் காளையர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே காளைகளை தழுவ அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் சுகாதாரத்துறை கால்நடைத்துறை வருவாய்த்துறை தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் கண்காணிப்பில் இந்த ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த ஜல்லிக்கட்டை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கண்டு ரசித்து வருகின்றனர்.

