மதுரையில் வடகிழக்கு பருவ மழைக்கு தாங்காமல் இடிந்து விழும் பழமையான கட்டடங்கள்; இதுவரையில் 4 கட்டடங்கள் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஹார்வி நகர் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் நிதி நிறுவனம் ஒன்றில் வேலையை பார்த்து வருகிறார். இவருக்கு எஸ்எஸ் காலனி வடக்கு வாசல் பகுதியில் 35 ஆண்டுகள் பழமையான ஓட்டு வீடு கட்டடம் உள்ளது. இதில் பழைய பொருள்கள் வைப்பதற்கும், வீட்டிற்கு அருகாமையில் உள்ள உணவகத்தின் பொருள்களை வைத்து எடுத்து செல்வதற்குமாக பயன்படுத்தி வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று இரவு வழக்கம்போல உணவகத்தில் பணியாற்றும் பிரசாத் என்பவர் வீட்டின் கதவை திறக்க முயற்சி செய்த போது திடீரென கட்டடம் பலத்த சத்ததுடன் சரிந்து விழுந்து விபத்திற்குள்ளனது. இதில் அதிர்ஷ்டவசமாக பிரசாத் என்பவர் சிறுசிறு காயங்களுடன் உயிர்த்தப்பினார்.
மேலும் இடிந்து விழுந்த ஓட்டு வீடு 35 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவும், மணல் செங்கற்களால் கட்டப்பட்டது என்பதால் மழை காரணமாக பழுதடைந்து சரிந்து விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் வடகிழக்கு பருவமழை எதிரொளியாக, மதுரை மாநகரில் தற்போது வரையில் அடுத்தடுத்து நான்கு பழமையான கட்டடம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது