மதுரை மாவட்டம், மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த பணியாளர்களின் ஊதியத்தில் கையாடல் செய்ததாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது தற்போது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் கழிவுநீரேற்ற ஒப்பந்த பணியாளர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்தநிலையில் இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதத்திற்கான ஊதியம் மற்றும் மாதம்தோறும் வழங்கிடும் ஊதியத்தில் இ.பி.எப், இ.எஸ்.ஐ பணத்தை வழங்காமல் தொடர்ந்து ஒப்பந்த நிறுவனம் கையாடல் செய்துவருவதாகவும், அந்நிர்வாகத்தை கண்டித்து மதுரை மேலபென்னாகரம் பகுதியில் உள்ள ஒப்பந்த நிறுவனர் தாஸ் என்பவரது வீட்டை சுமார் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து ஒப்பந்த நிறுவனத்தின் உரிமையாளர் என்பவருடன் கரிமேடு காவல் துறையினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு உடன்படாததை அடுத்து இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.