அ.தி.மு.க., ஆட்சியில், இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வாங்கியதில், தமிழக அரசுக்கு நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, விரிவான அறிக்கை சமர்ப்பிக்க, தமிழக சட்டசபை பொது கணக்கு குழு உத்தரவிட்டுள்ளது.அ.தி.மு.க., ஆட்சியில் 2011 – 16ல் ரேஷன் கார்டு தாரர்களுக்கு இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டது. இத்திட்டம் முதலில் ஊராட்சி பகுதியில் உள்ள கிராமங்களில் துவக்கப்பட்டது. அப்போது, கிராம மக்களுக்கு ஒரே நேரத்தில் மூன்று பொருட்களும் வழங்கப்பட்டன.அதன்பின், பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் வழங்கிய போது, சில இடங்களில் இரண்டு பொருட்கள் வழங்கி விட்டு, ஒரு பொருள் பின்னர் தருவதாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, கலெக்டர் அலுவலகத்தில், சட்டசபை பொதுக் கணக்கு குழு ஆய்வு நடத்தியது.
அப்போது, ‘கார்டு எண்ணிக்கைக்கு ஏற்ப தானே, இலவச பொருட்கள் வாங்கியிருக்க வேண்டும். ஏன் கூடுதலாக வாங்கப்பட்டன’ என்று குழுவினர் கேள்வி எழுப்பினர்.’மாவட்ட அளவில் வாங்கவில்லை’ என்று பதிலளிக்கப்பட்டது.இதுதொடர்பாக, சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை கூறியதாவது:ஒரு பயனாளிக்கு மூன்று பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அனைத்து பொருட்களும் ஒரே எண்ணிக்கையில் தானே வாங்கியிருக்க வேண்டும். வெவ்வேறு எண்ணிக்கையில் உள்ளன.இதில், 7 கோடி ரூபாய் வரை அரசுக்கு நிதியிழப்பு ஏற்பட்டிருக்கிறது. மொத்தம் 125 கோடி ரூபாய்க்கு பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அதிகாரிகள் கூறிய பதிலில் திருப்தியில்லாததால், விரிவான அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.