அவனியாபுரம் காவல் நிலையம் எதிரே உள்ள தனியார் பள்ளிக்கு தனிநபர் பூட்டு போட்டதால் – பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியல் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
மதுரை அவனியாபுரம் காவல் நிலையம் எதிரே உள்ள BMS பத்ம சாலியர் முன்னேற்ற சங்கம் சார்பாக தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஒன்று முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பள்ளி மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தப் பள்ளியின் பத்ம சாலியர் முன்னேற்றம் சங்கம் சார்பாக மூன்று வருடத்திற்கு ஒருமுறை சங்கம் சார்பாக மகாசபை கூட்டம் நடத்தி தலைவர் செயலாளர் தேர்ந்தெடுக்கும் முறை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி பத்மாசாலியார் முன்னேற்ற சங்கம் சார்பாக மகாசபை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் தற்காலிக செயலாளராக இருந்த மதுரை சிவா என்பவர் அந்தப் பதவியில் சரிவர செயல்படவில்லை என அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
தொடர்ந்து சங்கத்திலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட சிவா என்பவருக்கும் சங்கத்தினருக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி முன்னிட்டு இரண்டு நாள் பள்ளி விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது. அப்போது சங்கத்திலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டு அடிப்படை உறுப்பினராக இருந்து வரும் சிவா என்பவர் பவுன்சஸ் எனப்படும் பாதுகாவலருடன் வந்து பள்ளியில் இயங்கி வரும் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பள்ளி நிர்வாக அலுவலகம் ஆகிய அறைகளுக்கு பூட்டு போட்டு விட்டு சென்றார்.
இதனைக் கண்டித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரை கைது செய்து காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பத்மசாலியர் முன்னேற்ற சங்கத்தினை சேர்ந்தவர்கள் அவர் மீது விசாரணை மட்டுமே நடைபெற்று வருவதாகவும் இதுவரை வழக்குப்பதிவு செய்யாததால் கோபமடைந்த பள்ளி நிர்வாகம் மற்றும் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மதுரை அவனியாபுரம் அம்பேத்கர் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
BMS எனும் தனியார் பள்ளிக்கு அடியாட்களுடன் வந்து தலைமை ஆசிரியர் உள்ளிட்ட அறைகளுக்கு பூட்டு போட்டு சென்ற சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் சங்கத்தை சேர்ந்தவர்கள் உடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர் மீது வழக்கு பதியப்படும் என உத்தரவாதம் அளித்ததை எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.