வருகிற ஜூலை 24ஆம் தேதியன்று ஆடி அமாவசையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தின் கடைக்கோடி கிராமமான கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 1962 ம் ஆண்டு முதல், ஆடி அமாவாசையை முன்னிட்டு வாவுபலி பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. குழித்துறை நகராட்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்த விழா நடப்பாண்டு ஜூலை 9ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 20 நாட்கள் நடைபெறும் இந்த பொருள்காட்சி ஜூலை 28ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதில் குறிப்பாக ஆடி அமாவாசை நாளில் பொருட்காட்சியைக் காண அதிக அளவிலான மக்கள் கூடுவார்கள். ஆகையால் நடப்பாண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு ஜூலை 24ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அம்மாவட்ட ஆட்சியர் அழகுமீனா பிறப்பித்துள்ளார். அன்றைய நாளில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தும்.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஆகஸ்ட் 9ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் அவசரப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் மாவட்ட கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் தேவையான பணியாளர்களுடன் ஜூலை 24ம் தேதி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 24ல் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
