• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

Byவிஷா

Apr 7, 2023

நற்றிணைப் பாடல் 155:

ஒள் இழை மகளிரொடு ஓரையும் ஆடாய்
வள் இதழ் நெய்தற் தொடலையும் புனையாய்
விரி பூங் கானல் ஒரு சிறை நின்றோய்
யாரையோ நிற் தொழுதனெம் வினவுதும்
கண்டோர் தண்டா நலத்தை தெண் திரைப்
பெருங் கடல் பரப்பின் அமர்ந்து உறை அணங்கோ
இருங் கழி மருங்கு நிலைபெற்றனையோ
சொல் இனி மடந்தை என்றனென் அதன் எதிர்
முள் எயிற்று முறுவல் திறந்தன
பல் இதழ் உண்கணும் பரந்தவால் பனியே

பாடியவர்: பராயனார்
திணை: நெய்தல்

பொருள்:

மகளிரோடு சேர்ந்து நீ ஓரை (ஒருங்கு சேர்ந்து ஆடும் கூட்டு விளையாட்டு) விளையாடவில்லை. நெய்தல் பூவால் தழையாடை புனையவும் இல்லை. கானல் நிலத்தில் ஒருபக்கம் நிற்கிறாய். யார் நீ. வணக்கம். ஏதோ கேட்கிறேன். கண்டவர் மீளமுடியாத (தண்டா) நல்லழகு கொண்டவளே! (நலத்தை) கடல் பரப்பில் விருப்பம் கொண்டு வாழும் தெய்வமா நீ? கடல் பரப்பை விட்டுவிட்டு வந்து உப்பங்கழி ஓரம் நிற்கிறாயா? இனியாகிலும் சொல், மடந்தையே, என்றான் அவன். அவன் வினாக்களுக்கு விடையாக அவள் வாயிலுள்ள பற்கள் சற்றே திறந்தன.  புன்னகைஅவளது மலரிதழ் போன்ற கண்களில் மகிழ்ச்சித் துளிகள் பரந்தன.