நற்றிணைப் பாடல் 149:
சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்தி
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற
சிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்ப
அலந்தனென் வாழி தோழி கானல்
புது மலர் தீண்டிய பூ நாறு குரூஉச் சுவல்
கடு மான் பரிய கதழ் பரி கடைஇ
நடு நாள் வரூஉம் இயல் தேர்க் கொண்கனொடு
செலவு அயர்ந்திசினால் யானே
அலர் சுமந்து ஒழிக இவ் அழுங்கல் ஊரே
பாடியவர்: உலோச்சனார்
திணை: நெய்தல்
பொருள்:
மூக்கின் மேல் விரல் வைத்துக்கொண்டு பெண்கள் சிலரும் பலருமாகக் கூடிக் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டு சாடைமாடையாக அம்பல் பேசித் தூற்றுகின்றனர்.
தாய் சிறிய கோலைக் கையில் பிடித்துக்கொண்டு ஓட ஓட என்னை அடிக்கிறாள். இதனால் நான் நொந்துபோய்க் கிடக்கிறேன். தோழி, இதைக் கேள். நள்ளிரவில் அவர் தேரில் வருவார். அவருடன் நான் சென்றுவிடுவேன். இந்த ஊர் அலர் பேசிப் பேசி அழுது தொலையட்டும். இவ்வாறு தலைவி தோழியிடம் கூறுகிறாள்.