நற்றிணைப் பாடல் 89:
கொண்டல் ஆற்றி விண்தலைச் செறீஇயர்,
திரைப் பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி,
நிரைத்து நிறை கொண்ட கமஞ் சூல் மா மழை
அழி துளி கழிப்பிய வழி பெயற் கடை நாள்,
இரும் பனிப் பருவத்த மயிர்க் காய் உழுந்தின் 5
அகல் இலை அகல வீசி, அகலாது
அல்கலும் அலைக்கும் நல்கா வாடை,
பரும யானை அயா உயிர்த்தாஅங்கு,
இன்னும் வருமே தோழி! வாரா
வன்கணாளரோடு இயைந்த 10
புன்கண் மாலையும் புலம்பும் முந்துறுத்தே!
பாடியவர்: இளம் புல்லூர்க் காவிதி
திணை: முல்லை
பொருள்:
நீயும் நானும் தனியே புலம்பும்படி வாடைக்காற்று வீசுகிறது. மாலைக் காலமும் வந்துவிட்டது. தோழி! என்ன செய்யலாம்? – தலைவியும் தோழியும் இவ்வாறு உரையாடிக்கொள்கின்றனர்.
கீழைக் காற்று வீசி வானத்தில் செறிந்துகொண்டது (நின்றுவிட்டது). திரை பிதிர்ந்து பொங்கும் நுரை போல, வானத்து முகடுகளில் விருப்பத்துடன் ஏறி, சூலுற்ற மழைமேகம் பெருமழை பொழிந்த கடைசி நாளைத் தாண்டிவிட்டது. பனிப் பருவம் தொடங்கியது. உடலில் மயிர் கொண்டுள்ள காய் உழுந்து. உழுந்துச் செடியின் இலை உதிரும்படி வாடை வீசுகிறது. அவர் காதலின்பம் நல்காத காலத்தில் துன்பறுத்தும்படி வாடை வீசுகிறது. மிகப் பெரிய யானை கொட்டாவி விடுவது போன்று வீசுகிறது. அத்துடன் மாலையும் வந்துவிட்டது. இந்த நிலையில் அவர் இல்லாமல் தனிமையில் இருக்கிறோம்.