நற்றிணைப் பாடல் 173:
சுனைப் பூக் குற்றும் தொடலை தைஇயும்
மலைச் செங் காந்தட் கண்ணி தந்தும்
தன் வழிப் படூஉம் நம் நயந்தருளி
வெறி என உணர்ந்த அரிய அன்னையை
கண்ணினும் கனவினும் காட்டி இந் நோய்
என்னினும் வாராது மணியின் தோன்றும்
அம் மலை கிழவோன் செய்தனன் இது எனின்
படு வண்டு ஆர்க்கும் பைந் தார் மார்பின்
நெடு வேட்கு ஏதம் உடைத்தோ
தொடியோய் கூறுமதி வினவுவல் யானே
பாடியவர்: ஆசிரியர் பெயர் தெரியவில்லை
திணை: குறிஞசி
பொருள்:
சுனையில் பூத்திருக்கும் பூவைப் பறிக்கிறோம். தொடலை ஆடையாகத் தைக்கிறோம். மலையில் பூத்திருக்கும் செங்காந்தள் பூக்களைப் பறித்துக் கண்ணியாகக் கட்டித் தலையில் அணிந்துகொள்கிற்றோம். நம் விருப்பம் போல் இவ்வாறு நடந்துகொள்கிறோம். இதனைப் பார்த்த தாய் எனக்கு முருகன் ஆட்டிவைக்கும் வெறி பிடித்துவிட்டது என்று எண்ணுகிறாள். அவளுக்கு நாம் உண்மையை ஒளிக்காமல் சொல்லிவிட்டால் முருகனுக்கு என்ன குறை நேர்ந்துவிடும். இவ்வாறு தலைவி தோழியை வினவுகிறாள். உண்மை – எனக்கு இருக்கும் இந்த நோய் பிறர் கண்ணுக்குப் புலப்படாது. கனவிலும் வெளிப்படாது. என்னாலும் இந்த நோய் தோன்றவில்லை. மணி போல் தோன்றும் அந்த மலையின் தலைவனால் வந்தது என்று சொல்லிவிட்டால் முருகனுக்கு என்ன குறை வந்துவிடும்?