• Fri. May 3rd, 2024

இலக்கியம்:

Byவிஷா

Apr 20, 2024

நற்றிணைப்பாடல் 362:

வினை அமை பாவையின் இயலி, நுந்தை
மனை வரை இறந்து வந்தனை; ஆயின்,
தலை நாட்கு எதிரிய தண் பத எழிலி
அணி மிகு கானத்து அகன் புறம் பரந்த
கடுஞ் செம்மூதாய் கண்டும், கொண்டும் நீ விளையாடுக சிறிதே; யானே,
மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை
மணல் இடு மருங்கின் இரும் புறம் பொருந்தி,
அமர் வரின், அஞ்சேன், பெயர்க்குவென்;
நுமர் வரின், மறைகுவென் – மாஅயோளே!

பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார் திணை: பாலை

பொருள்:

கரிய மாமைநிறமுடைய காதலியே! இயந்திரமமைந்த கொல்லிப் பாவைபோல இயங்கா நின்று; நின் தந்தையின் மனையெல்லையைக் கடந்து யான் கூறுகின்ற சொற்களை மேற்கொண்டு என்னொடு போந்தனை; ஆதலால்; முதற் பெயலைப் பெய்யத் தொடங்கிய குளிர்ச்சியான மழையையுடைய மேகம் பெய்தலாலே அழகு மிக்க காட்டில்; அகன்ற மேலிடமெல்லாம் பரவிய விரைந்த செலவினையுடைய சிவந்த ஈயலின் மூதாயை நோக்கியும் அவற்றைப் பிடித்தும் சிறிது பொழுது நீ விளையாடுவாயாக! யானோவெனில், இளைய களிற்றியானை யுரிஞ்சிய பருத்த அடியை உடைய வேங்கை மரத்தின் மணற் பரப்பினையுடைய அதன் பெரிய பின்புறத்தில் மறைந்திருந்து; ஆறலைகள்வர் முதலாயினோர் சூழ்ந்து போர் செய்ய வரின் அஞ்சாது போர் புரிந்து அவர் ஓடுமாறு பெயர்க்குவேன்; அவ்வண்ணம் நின் சுற்றத்தார் தேடி நின்பின்னே தொடர்ந்துவரின் மறைந்துகொள்ளா நிற்பேன்காண்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *