• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ரம்ஜான் அன்று சாலையில் நமாஸ் செய்தால் லைசென்ஸ், பாஸ்போட்டு ரத்து

Byவிஷா

Mar 28, 2025

வருகிற 31ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, சாலையில் நமாஸ் செய்தால் பாஸ்போட், லைசென்ஸ் உள்ளிட்ட அடையாளங்கள் ரத்து செய்யப்படும் என்று உத்தரபிரதேசத்தின் மீரட் சிட்டி எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் தற்போது இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர். சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து அதன்பிறகு இஃப்தார் விருந்துடன் நோன்பை முடித்து வருகின்றனர்.
வரும் 31ம் தேதி நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ரம்ஜான் என்பது பிறையின் அடிப்படையில் கொண்டாடப்பட உள்ளது இதனால் சில இடங்களில் ஒருநாளுக்கு முன்பு அல்லது ஒருநாளைக்கு பின்பு கூட ரம்ஜான் கொண்டாடப்பட வாய்ப்புள்ளது. இதற்கிடையே தான் ரம்ஜான் பண்டிகையையொட்டி உத்தர பிரதேச மாநிலத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் இருபிரிவினரை சேர்ந்தவர்களை அழைத்து அமைதி கூட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்களுக்கு உத்தர பிரதேச மாநில காவல்துறை பல்வேறு அறிவுரைகைளை வழங்கி உள்ளது.
இதுதொடர்பாக மீரட் எஸ்பி (சிட்டி) அயூஸ் விக்ரம் சார்பில் அனைத்து இமாம்களுக்கும் முக்கிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதாவது இஸ்லாமியர்களை மசூதியில் தொழுகை மேற்கொள்ள கூற வேண்டும். சாலைகளில் தொழுகை நடத்தினால் கடும் நடவடிக்கை என்பது எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். சாலைகளில் தொழுகை நடத்துவதற்கு அனுமதியில்லை. சாலைகளில் தொழுகை நடத்தினால் போக்குவரத்து பாதிக்கப்படும். இதனால் இந்த ஆண்டு சாலைகளில் நமாஸ் செய்ய அனுமதியில்லை.
இதை மீறி சாலைகளில் நமாஸ் செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வழக்குப்பதிவு செய்யப்படும். அதுமட்டுமின்றி பாஸ்போர்ட் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் ஆகியவை ரத்து செய்யப்படும் என்று வார்னிங் செய்துள்ளார். அதுமட்டுமின்றி புதிய பாஸ்போர்ட் வழங்குவதற்கு தடையில்லா சான்றும்(என்ஓசி) வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சான்று இருந்தால் தான் புதிய பாஸ்போர்ட் பெற முடியும் என்பதால் போலீசார் இந்த எச்சரிக்கையை வழங்கி உள்ளனர்.
கடந்த ஆண்டும் உத்தர பிரதேசத்தில் இதுபோன்ற நடவடிக்கை என்பது எடுக்கப்பட்டது. மொத்தம் 200 பேர் மீது நடவடிக்கை பாய்ந்தது. இதில் 80 பேர் அடையாளம் காணப்பட்டனர். அந்த வகையில் இந்த ஆண்டும் உத்தர பிரதேசத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி சாலைகளில் நமாஸ் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் பதற்றமான இடங்களில் ட்ரோன் மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சமூக வலைதளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளது. தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தர பிரதேச போலீசார் தயார் நிலையில் உள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தில் ரம்ஜான் பண்டிகைக்கான இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள், இஸ்லாமிய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.