• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’..,

ByVasanth Siddharthan

Sep 6, 2025

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை நத்தம், திண்டுக்கல், நிலக்கோட்டை தொகுதிகளில் மக்களை சந்திக்கிறார். முதலில் நத்தம், பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் திரண்டிருந்த பெருந்திரளான மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர், பேசியதாவது : விவசாயிகளுக்கு அதிமுக ஆட்சி பல திட்டங்களை செயல்படுத்தியது.விவசாயிகள் நிறைந்த இப்பகுதியில், அதிமுக ஆட்சி விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியதாகவும், தற்போதைய திமுக அரசு மக்கள் நலத் திட்டங்களை நிறுத்திவிட்டதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டினார்.

விவசாயிகளுக்கு ஆதரவாக, அதிமுக ஆட்சியில் இரண்டு முறை கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், குடிமாராமத்து திட்டத்தின் மூலம் நீர் சேமிப்பு, மும்முனை மின்சார வசதி, பயிர் சேதத்திற்கு நிவாரணம் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார். “விவசாயிகளை இமைக் காப்பது போல பாதுகாத்தது அதிமுக அரசு தான்.

திமுக அரசு மீது விமர்சனம்:
2021 தேர்தலில் திமுக அறிவித்த 525 அறிவிப்புகளில் 10 சதவீதம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், திருமண உதவி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டம் போன்றவற்றை திமுக அரசு நிறுத்திவிட்டதாகவும் பழனிசாமி குற்றம்சாட்டினார். “7300 கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட மடிக்கணினி திட்டம் அற்புதமானது. ஆனால், ஏழைகளுக்கு எதுவும் செய்தால் ஸ்டாலினுக்கு பொறுக்காது,” என்று அவர் விமர்சித்தார்.

மேலும், 4000 அம்மா மினி கிளினிக் திட்டம், பொங்கல் பரிசாக 2500 ரூபாய், அம்மா இருசக்கர வாகன மானியம், ஏழைகளுக்கு இலவச வீடு உள்ளிட்ட திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டதாகவும், கொரோனா தொற்று காலத்தில் தமிழகத்தை காப்பாற்றியது அதிமுக அரசு என்றும் அவர் கூறினார்.

டாஸ்மாக் மதுபான கூடம் ஊழல் குற்றச்சாட்டு:
திமுக ஆட்சியில் டாஸ்மாக் மதுக்கடைகளில் ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளதாகவும், பெரும்பாலான மதுக்கடைகளை திமுகவினரே எடுத்து நடத்துவதாகவும் பழனிசாமி குற்றம்சாட்டினார். “கலெக்ஷன், கமிஷன், கரெக்ஷன் மட்டும் இந்த ஆட்சியில் சரியாக நடக்கிறது,” என்று அவர் கிண்டல் செய்தார்.

மகளிர் உரிமைத் தொகை:
திமுக அரசு 30 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்திருப்பது, அதிமுகவின் தொடர் அழுத்தத்தால் மட்டுமே சாத்தியமானது என்று கூறிய பழனிசாமி, “இந்த ஊழல் அரசு தொடர வேண்டுமா?” என்று மக்களிடம் கேள்வி எழுப்பினார்.

நத்தம் பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர்:
420 கோடி மதிப்பில் நத்தம் பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்தியது அதிமுக அரசு என்று குறிப்பிட்ட அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்களை கேட்டுக்கொண்டார். “அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நத்தம் தொகுதி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்,” என்று அவர் உறுதியளித்தார்.

விவசாயிகளுக்கு உறுதி:
மா விவசாயம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இதற்கு திமுக அரசு நிவாரணம் வழங்கவில்லை என்றும் குற்றம்சாட்டிய பழனிசாமி, புளி விவசாயத்தை பாதுகாக்க கிடங்கு அமைக்கப்படும் என்றும், மக்களின் பிற கோரிக்கைகளை நிறைவேற்றவும் அதிமுக ஆட்சி நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.