• Fri. Mar 29th, 2024

பக்தர்கள் இன்றி நடைபெற்ற சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த லீலை..!

By

Aug 19, 2021

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழாவில் சிறப்புவாய்ந்த நிகழ்வான சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த லீலையின் போது பக்தர்கள் இல்லாமல் நடைபெற்றது.


உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் ஆண்டு முழுவதிலும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் சித்திரை திருவிழாவும், ஆவணி மூலத்திருவிழாவும் பிரசிதிபெற்றதாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கடந்த 5 ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கோயிலில் நடைபெற்று வரும் ஆவணி மூல உற்சவம் 9 – ம் திருவிழாவான இன்று (ஆக., 19 – ம் தேதி வியாழக்கிழமை) காலை 8.00 மணிக்கு சுவாமி திருக்கோயில் வளாகத்திற்குள்ளேயே புறப்பாடு செய்யப்பட்டு நான்கு ஆடி வீதிகளில் புறப்பாடு நடைபெற்று பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.


பிட்டுக்கு மண் சுமந்த லீலை மதியம் 1.05 மணி முதல் 1.29 மணிக்குள் நடைபெற்றது. திருக்கோயிலில் பாரம்பரிய பழக்க வழக்கப்படி முற்பகல் பொது மக்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. எனவே, இன்று மாலை 4.00 மணிக்கு வழக்கம் போல் நடைதிறக்கப்பட்டு இரவு 8.00 மணி வரை பொது மக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், தமிழக அரசின் நிலையான வழிகாட்டுதல் உத்தரவுப்படி ஆக., 20, 21 மற்றும் 22 ஆகிய மூன்று நாள்களும் பொது மக்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *