• Mon. Apr 21st, 2025

லாரி, மினி பேருந்து மோதி பயங்கர விபத்து – கும்பமேளாவில் இருந்து திரும்பிய 7 பேர் பலி

ByP.Kavitha Kumar

Feb 11, 2025

கும்பமேளாவில் பங்கேற்று விட்டு திரும்பும் போது மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் லாரி- மினி பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்கி நடந்து வருகிறது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

அப்படி கும்பமேளாவில் புனித நீராடிவிட்டு ஆந்திராவை சேர்ந்தவர்கள் சிலர் மினி பேருந்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த மினி பேருந்து இன்று காலை மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள சிஹோரா நகருக்கு அருகே எதிரே வந்த லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆந்திராவை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி தவறான பக்கத்திலிருந்து நெடுஞ்சாலையில் சென்றதால் விபத்து ஏற்பட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.