தேசிய நெடுஞ்சாலைத் துறையின் மூலம் மேட்டுப்பாளையம் முதல் தமிழக எல்லையான கக்கநல்லா வரை சாலை விரிவாக்கப் பணியானது கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான மலைப் பாதை பணியானது நிறைவு பெற்றது. ஆனால் மண் சரிவு அதிகமாக ஏற்படக் கூடிய மரப்பாலம் முதல் குன்னூர் வரையிலான சாலையில் சாலை விரிவாக்கப் பணி முற்றிலும் முடிவடைந்த நிலையில், மண் சரிவை தடுக்க தடுப்புச் சுவர் இதுவரை அமைக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், மேட்டுப்பாளையம் – குன்னூர் சாலையில் பல்வேறு இடங்களில் அடிக்கடி மண்சரிவு மற்றம் மரங்கள் விழுந்தவாறு உள்ளன.
இதனிடையே, நாளை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், மேட்டுப்பாளையம் – குன்னூர் சாலையில் மீண்டும் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பெரிய விபத்து ஏற்படும் முன் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் விரைவாக தடுப்பு சுவர் அமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.