எடப்பாடியார் மீது வழக்குப்பதிவு செய்த திமுக அரசு கே.என.நேரு மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க விருதுநகர் மேற்கு மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி வத்திராயிருப்பு வடக்கு. தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக புரட்சித்தலைவி அம்மா 75வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் வத்திராயிருப்பு அண்ணா சீரணி கலையரங்கத்தில் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக கழக அமைப்பு செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது,
தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளாக திமுக ஆட்சி நடைபெற்று வருகின்றது. விடியல் வரும் என்று சொல்லி மக்களை ஏமாற்றி வாக்குகளை கேட்டார்கள். இதுவரை விடியல் வரவில்லை. அண்ணா திமுக ஆட்சியில் அம்மாவுடைய ஆட்சியில் எடப்பாடியார் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் மூடுவிழா நடத்துகின்ற வேலையில் தான் திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.தாலிக்கு தங்கம் அற்புதமான திட்டம், திருமண உதவித்தொகை இப்படி எல்லா திட்டத்தையும் திமுக அரசு நிறுத்திவிட்டது. வேற எந்த சாதனையும் திமுக அரசு செய்யவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில், மக்களிடத்தில் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி வாக்குகளை பெற்றுத்தான் தி.மு.க வெற்றி பெற்றது. ஆனால் இன்றைக்கு வாக்களித்த மக்களுக்கு சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு , பால் விலை உயர்வு, கட்டுமான பொருள் உயர்வு என்று விலைவாசி உயர்வை தான் மக்களுக்கு பரிசளித்து இருக்கிறது தி.மு.க. அதிமுக ஆட்சியில் எடப்பாடியார் காலத்தில்தான் தமிழகத்தில் 11 மெடிக்கல் கல்லூரி கொண்டு வரப்பட்டது. ஈரோட்டில் ஆளுங்கட்சியின் அத்துமீரலால் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். ஈரோட்டில் அண்ணா திமுக வேட்பாளர் 45 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார் என்று சொன்னால் அதே மிகப்பெரிய வெற்றி தான். அண்ணா திமுகவிற்கு வாக்களிப்பது யாராலும் தடுக்க முடியாது என்பதற்கு ஈரோடு இடைத் தேர்தல் ஒரு எடுத்துக்காட்டாகும். ஏர்போர்ட் சம்பவத்தில் எடப்பாடியார் மீது வழக்குப்பதிவு செய்த திமுக அரசு, திருச்சி சிவா கார் தாக்கப்பட்ட சம்பவத்தில் அமைச்சர் கே.என.நேரு மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லைஅண்ணன் எடப்பாடியார் தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும். அப்போதான் நாட்டில் சுபிட்சம் ஏற்படும். வருங்காலங்களில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர் பேசினார்.