• Tue. Apr 22nd, 2025

கூடலூரில் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கிடா முட்டு போட்டி!!

தேனி மாவட்டம் கூடலூரில் காளியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு மாபெரும் கிடா முட்டு போட்டி நடைபெற்றது.

தேனி மாவட்டம் கூடலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் வருடம் தோறும் பங்குனி மாத உற்சவ திருவிழாவினை வெகு விமர்சையாக நடத்துவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு பங்குனி மாத உற்சவ திருவிழாவினை முன்னிட்டு, மாவட்ட கிடா வளர்ப்போர் சங்கத்தினர் மற்றும் விழா கமிட்டியினர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் முறையாக அனுமதி பெற்று தேனி மாவட்டத்திலேயே முதன்முறையாக மாபெரும் கிடா முட்டு போட்டியினை மிக விமர்சையாக நடத்தினார்கள்.

இந்த போட்டியில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 35க்கும் மேற்பட்ட ஆட்டு கிடாய்களுடன் உரிமையாளர்கள் பங்கேற்றனர். போட்டியில் கிடாய்கள் களம் இறங்கும் முன்பு கிடாய்களுக்கு கால்நடை மருத்துவத்துறையினர் சார்பில் மருத்துவ பரிசோதனை செய்த பின்னரே களத்தில் அனுமதிக்கப்பட்டது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்ற கிடாய்களை உற்சாகப்படுத்தியும், ஒன்றோடு ஒன்று சீறிப்பாய்ந்து வந்து முட்டுவதை பார்த்தும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த விழாவினை கூட்டுறவு மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்களின் நேர்முக உதவியாளர் ராஜா தொடங்கி வைத்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர். விழாவிற்கு உத்தமபாளையம் வட்டார துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போட்டியில் வெற்றி பெற்ற கிடாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.