விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை ஓட்டம் வெற்றி அடைந்துள்ளது என இஸ்ரோ அறிவித்துள்ளது.
“ககன்யான்” எனும் இஸ்ரோ அமைப்பின் விண்கலம் மூலமாக மனிதர்களை விண்ணின் 400 கிலோ மீட்டர் சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பி, 1 முதல் 3 நாள் ஆய்வுப் பணிக்கு பின் பத்திரமாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவது தான் ககன்யான் திட்டத்தின் நோக்கம். இந்த திட்டத்தின் சோதனை ஓட்டம் இன்று (21.10.23) துவங்க இருந்த நிலையில் காலை 9 மணி அளவில் ககன்யான் திட்டத்திற்கான முதல் கட்ட சோதனை ஓட்டம் ஒத்திவைப்பதாக இஸ்ரோ அறிவித்தது.
ராக்கெட்டின் என்ஜின் திட்டமிட்டப்படி செயல்படாததால் ராக்கெட் ஏவுதல் தற்காலிகமாக நிறுத்தம் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு கண்டறியப்பட்டு, சரி செய்யப்பட்டது எனவும் ககன்யான் திட்டத்திற்கான சோதனை காலை 10 மணிக்கு மீண்டும் துவங்கி விண்ணில் ஏவப்பட்டது. ஏவப்பட்ட பின்னர் ராக்கெட்டில் இருந்து மாதிரி விண்கலம் திட்டமிட்டப்படி பிரிந்து மாதிரி விண்கலத்தின் பாராசூட் விரிந்த நிலையில் தரையிறங்கியது.
இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறுகையில், மாதிரி விண்கலத்தின் சோதனை ஓட்டம் அனைத்து நிலைகளிலும் வெற்றிகரமாக நடந்தது என தெரிவித்தார்.