• Thu. May 2nd, 2024

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத் தீவு திரும்ப பெற வேண்டும்-அண்ணாமலை பேட்டி

BySeenu

Apr 1, 2024

கோவை பீளமேடு, அவிநாசி சாலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக பா.ஜ.க தேர்தல் அலுவலகத்தை மாநில தலைவரும், கோவை வேட்பாளர் அண்ணாமலை திறந்து வைத்தார். பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ உடன் இருந்தார்.

பின்னர் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்..,

”தி.மு.க இத்தனை ஆண்டு காலமாக காங்கிரஸ் அரசு எங்களை கேட்காமல் கச்சத் தீவை இலங்கைக்கு கொடுத்து விட்டதாக கூறுவது கட்டுக் கதை. தி.மு.க வினர் தமிழக மக்களை வஞ்சித்து இருக்கிறார்கள். அப்போதைய மத்திய அமைச்சர் கேவல்சிங் கலைஞர் கருணாநிதியை சந்தித்து அனுமதி பெற்ற பின்னரே, கச்சத் தீவு கொடுக்கப்பட்டு உள்ளது. கச்சத் தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டதில் கருணாநிதியின் முடிவும் இருந்தது. கருணாநிதி கச்சத் தீவை கொடுக்க சம்மதம் தெரிவித்தது மட்டுமின்றி சிறிய அளவில் போராட்டம் நடத்தி கொள்வதாக அமைச்சர் கேவல் சிங்கிடம் பேசி உள்ளார். முதலமைச்சராக இருந்த கருணாநிதி அனுமதி இல்லாமல் கச்சத் தீவை மத்திய அரசு கொடுக்க வாய்ப்பே இல்லை. இந்திய இறையாண்மை மீது தி.மு.க விற்கு நம்பிக்கை உள்ளதா? ஆழ் கடலில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் தி.மு.க தான்.

தமிழக பா.ஜ.க கச்சத் தீவை மீட்க வேண்டும் என கோரிக்கையை வைத்து உள்ளோம். தமிழக கடல் பகுதியில் மீன் வளம் குறைவாக இருப்பதால் தமிழக மீனவர்கள் சர்வதேச எல்லை அருகே சென்றாலே இலங்கை அரசு கைது செய்கிறது. தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத் தீவு திரும்ப பெற வேண்டும். கச்சத் தீவை தாரை வார்த்தது காங்கிரசும், தி.மு.க வும் சேர்ந்து செய்த சதி. கச்சத் தீவை மீட்கும் விவகாரத்தில் இந்திய அரசு நல்ல முடிவு எடுக்கும். கச்சத் தீவு மீட்பு பா.ஜ.க வின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும். வங்கதேசத்துடன் உள்ள எல்லை குழப்பங்களை தீர்க்க சில பகுதிகள் கொடுக்கப்பட்டது. வங்கதேச பிரச்சனையும், கச்சத்தீவு பிரச்சனையும் ஒன்றல்ல. சரித்திரம் தெரியாமல் மல்லிகர்ஜூன கார்கே பேசுகிறார். கச்சத் தீவை இலங்கைக்கு கொடுத்ததில் இந்தியாவிற்கு ஒரு பைசா கூட இலாபம் இல்லை.
கச்சத் தீவை தாரைவார்த்ததற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும். காங்கிரஸ் மற்றும் தி.மு.க மன்னிப்பு பிரச்சாரம் செய்ய வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு செலக்டிவ் அம்னிசியா உள்ளது. நான் பிடித்த முயலுக்கு 3 கால் என பேசுவது முதலமைச்சர் பொறுப்பிற்கு அழகல்ல. கடந்த 33 மாதங்களில் தி.மு.க அரசு செய்த சாதனை என்ன? பிரதமர் மோடி 10 இலட்சம் 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தமிழகத்திற்கு தந்து உள்ளார். அதிக அளவிலான அரசு மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் தந்து உள்ளார். நாங்கள் கேட்கும் கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும். அன்று நாடாளுமன்றத்தில் இருந்து தி.மு.க வினர் ஏன் வெளிநடப்பு செய்தனர்?முதலமைச்சர் தான் திசை திருப்ப முயல்கிறார்.

கச்சத் தீவை இலங்கை கொடுப்பது பற்றி அன்றைய பிரதமர் இந்திராகாந்தி, ஒரு மத்திய அமைச்சர், முதலமைச்சர் கருணாநிதி ஆகியோருக்கு மட்டும் தான் தெரியும்.
கச்சத் தீவு மதிப்பற்றது என்பது காங்கிரஸ் நிலைப்பாடாக இருந்து உள்ளது. மீனவர்கள் நலனுக்காக இந்த பிரச்சனையை தீர்க்க நாங்கள் முயல்கிறோம். இலங்கை முழுவதும் இந்தியா உடன் நட்புறவில் உள்ளது. இலங்கைக்கு நிதியுதவி செய்வது தொப்புள் கொடி உறவு என்பதால் தான். இதற்கும் தேர்தலுக்கும் சம்மந்தம் இல்லை. சீனாவிற்கு நிலம் கொடுத்தது எல்லாம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான். நாங்கள் ஒவ்வொரு இடமாக மீட்டு கொண்டு உள்ளோம். பா.ஜ.க அதிகாரபூர்வமாக எல்லை பகுதியை சீனாவிற்கு தரவில்லை. திசை மாற்றுவதற்காக கார்கே பேசுகிறார். இலங்கை தமிழருக்கு குடியுரிமை உள்ளது. 11 ஆண்டுகள் வாழ்ந்தவர்களுக்கு குடியுரிமை தந்து உள்ளோம். எதிர் கட்சிகளை ஒழிப்பேன் என மோடி சொல்லவில்லை. காங்கிரஸ் கட்சி ஆட்சி இருக்க கூடாது என்பது தான் எங்கள் நோக்கம்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *