அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சாராக இருந்தவர் கே.பி. அன்பழகன். இந்த நிலையில், கே.பி. அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கே.பி. அன்பழகனின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடர்கிறது.
சென்னை, தருமபுரி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும், தெலுங்கானாவிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கே.பி.அன்பழகனின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்தை விட கூடுதலாக 11.32 கோடி ரூபாய் சொத்துக்குவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கே.பி.அன்பழகனுடன் சேர்த்து அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசி மோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கே.பி. அன்பழகன் 2016 முதல் 2021 வரை உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, கே.சி. வீரமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகிய 5 பேரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.