செல்போன் விற்பனையில் முன்னணி நிறுவனமாக இருந்து வரும் பூர்விகா நிறுவனத்தில் ஐ.டி.ரெய்டு நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செல்ஃபோன் விற்பனை நிறுவனங்களில் முன்னணியில் இருந்து வருவது பூர்விகா நிறுவனம். இந்நிறுவனம் 2004ல் தொடங்கப்பட்டு மிகக் குறுகிய காலத்தில் தென்னிந்தியா முழுவதும் 400க்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் யுவராஜ்.
பூர்விகா நிறுவனத்தின் பிரதான கிளை சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் செயல்பட்டு வருகிறது. இந்த விற்பனை நிறுவனம் மூலம் செல்போன், டேப்லெட்கள் மற்றும் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி. உட்பட பலவகையான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிறுவனத்தில் இன்று காலை 7.35 மணி முதல் 10க்கும் மேற்பட்ட வருமான வரி துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிறுவனத்தில் ஊழியர்கள் வழக்கம் போல் பணிக்கு வந்துள்ள நிலையில், ஏற்கனவே பணியில் இருந்த ஊழியர்களை தவிர்த்து புதிதாக வெளியிலிருந்து வரும் ஊழியர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை எனத் தெரிகிறது. தொடர்சோதனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சென்னை பள்ளிக்கரணை உட்பட பல கிளைகளில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்று வருவதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், செல்போன் விற்பனையில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வரும் பூர்விகா நிறுவனத்தின் கணக்கு வழக்கு தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி சோதனை நடத்திவருவதாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
சென்னை பூர்விகா நிறுவனத்தில் ஐ.டி.ரெய்டு
