
காங்கிரஸ்காரர்களுக்கு இன்று மரியாதை இருக்கிறது என்றால், அது திமுகவால் தான் வந்தது என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு
தூத்துக்குடியில், தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர் ஏ.பி.சி.வீ.சண்முகம், பொதுவாழ்வில் ஈடுபட்டு 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, அவரை பாராட்டும் வகையில் பொதுவாழ்வில் பொன்விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசும்போது,
ஆளுகின்றவர்கள் சாதி, மதம், மொழியின் பெயரால் மக்களை பிரிக்க பார்க்கிறார்கள். அவர்களை எதிர்க்க நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்.பாஜகவை திமுக. எதிர்க்கும் அளவுக்கு கூட காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறதா என்று தெரியவில்லை. தமிழகத்திற்கு நல்ல முதலமைச்சர் கிடைத்துள்ளார். அவர் சமதர்மத்துடன் ஆட்சி நடத்தி வருகிறார். அவரை நாம் முழுமையாக ஆதரிக்க வேண்டும்.
காங்கிரஸ்காரர்களுக்கு இன்று மரியாதை இருக்கிறது என்றால், அது திமுகவால் தான் வந்து இருக்கிறது. திமுக கூட்டணியின் ஆதரவுடன்தான் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றது. தேர்தல் வெற்றி என்பது குறிக்கோள் அல்ல. இந்த நாடு காப்பாற்றப்பட வேண்டும்” என்று கூறினார்.