• Mon. May 6th, 2024

புகார் அளித்தால் பணம் கிடைக்காது- என கூறி முதலீட்டார்களை முகவர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றச்சாட்டு.

Byகுமார்

Apr 8, 2024

ஜாமினில் வெளிவந்துள்ள நியோமேக்ஸ் இயக்குனர்கள் பல கோடி ரூபாய் சொத்துக்களை விற்பனை செய்து வருவதை தடுக்க கோரி மதுரை மாவட்ட பொருளதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர்.

மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவந்த நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தினை இரட்டிப்பாக தருவதாகவும் மாதம் 12 முதல் 30சதவீத வட்டி தருவதாகவும் தெரிவித்ததன் அடிப்படையில் பல்வேறு நபர்கள் நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார்.

ஆனால், முறையாக பணத்தை திரும்ப வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதால் முதலீடு செய்த நபர்கள் சிலர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர்

அதனடிப்படையில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குனரான வீரசக்தி , கமலக்கண்ணன் , பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் மீது பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமான கிளை நிறுவனங்களான 17 நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டு விலையுயர்ந்த கார்கள், தங்கம், ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக தமிழக முழுவதும் இதுவரை நியோமேக்ஸ் இயக்குனர்கள் கமலக்கண்ணன் , வீரசக்தி, பாலசுப்பரமணியன், மற்றும் துணை நிறுவன இயக்குனர்கள் என 29பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 17 கோடிமதிப்பக்கும் மேலான 752 வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகின்றது. இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட பொருளாதார குற்றவியல் சிறப்பு நீதிமன்ற உத்தரவுப்படி நியோ மேக்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கு நிலங்கள் ஒப்படைப்பு தொடர்பான கருத்துகேட்பு சிறப்பு முகாம் நடைபெற்ற நிலையில் அந்த நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

இந்நிலையில் நியூ மேக்ஸ் மோசடி தொடர்பான வழக்கில் ஜாமீனில் வெளியே உள்ள இயக்குனர்களான கமலக்கண்ணன்,சிங்காரவேலன், கபில் , செல்வக்குமார் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவினரால் தேடப்படும் குற்றவாளிகள் பெயரிலும், அவர்களின் பினாமிக்களின் பெயர்களிலும் பல கோடி ரூபாய் சொத்துக்களை மதுரை சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, தஞ்சாவூர், குற்றாலம் உள்ளிட்ட தமிழகம் முழுவதிலும் மோசடியாக நிலங்களை விற்பனை செய்து வருவதாக கூறி நியோமேக்ஸ்சின் துணை நிறுவனங்களில் கீழ் முதலீடு செய்த முதலீட்டார்களான தேனி மாவட்ட நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பில் 100க்கும் மேற்பட்ட முதலீட்டார்கள் இன்று மதுரை தபால்தந்தி நகர் பகுதியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இது குறித்து பேசிய முதலீட்டார்கள் : நியோ மேக்ஸ் நிறுவனத்தின் கீழ் ஆசை வார்த்தை காட்டி எங்களிடமிருந்து பல கோடி ரூபாய் பணம் மற்றும் நிலத்தினை ஏமாற்றி வாங்கிக்கொண்டனர்

இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தால் உங்களுக்கான பணம் மீண்டும் கிடைக்காது என கூறி தொடர்ந்து மிரட்டி வந்ததால் இதுவரை நாங்கள் புகார் அளிக்கவில்லை,

ஆனால் தற்போது இந்த வழக்கில் ஜாமினில் வெளிய வந்துள்ள நியோ மேக்ஸ் இயக்குனர்கள் தொடர்ச்சியாக தமிழக முழுவதிலும் நிலங்களை சட்ட விரோதமாக விற்பனை செய்வதோடு, வாங்கியும் வருகின்றனர்.

எனவே இதனை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் உடனடியாக இதனை தடுத்து நிறுத்த கோரியும் இன்று நேரில் வந்து புகார் அளித்துள்ளோம் தொடர்ச்சியாக தாங்கள் புகார் அளித்தால் தங்களது பணம் கிடைக்காது என முகவர்கள் மிரட்டி வருவதோடு கொலை மிரட்டல் விடுத்தும் வருகின்றனர்.

எனவே தங்களது உயிருக்கு காவல்துறை உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் தங்களது உயிருக்கு ஏதேனும் ஏற்பட்டால் அதற்கு நியோ மேக்ஸ் நிறுவன இயக்குனர்கள் தான் பொறுப்பு எனவும் தெரிவித்தனர் தாங்கள் ஏமாற்றப்பட்ட நிலையில் தங்களுக்கான பணத்தை மீட்டு தர பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் தெரிவித்தனர்

நீதிமன்றம் ஜாமினில் வெளியே வந்த பின்பாக எந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என தெரிவித்த நிலையிலும் கூட இதுபோன்ற தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை ஜாமினில் உள்ள நியோமேக்ஸ் இயக்குனர்கள் விற்பனை செய்துவருவதாக குற்றம்சாட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *