தமிழகம் முழுவதும் நாளை (அக் 21) சனிக்கிழமை அன்று அயோடின் குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க விழிப்புணர்வு முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
வளர்ச்சிதை மாற்றங்களும் தைராய்டு முறையாக சுரப்பதற்கும் மூளை மற்றும் நரம்பு மண்டல வளர்ச்சிக்கும் அயோடின் சத்து என்பது முக்கியமானதாக உள்ளது. உடலில் போதிய அயோடின் இல்லாவிட்டால் கழுத்து கழலை நோய், மூளை வளர்ச்சி குறைபாடு, தைராய்டு குறைபாடு மற்றும் பிரசவகால பிரச்சனைகள் என பல பிரச்சனைகள் ஏற்படலாம். இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் அயோடின் குறைபாட்டை முற்றிலும் ஒழிப்பதில் சவால்கள் நிறைந்துள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு உலக அயோடின் குறைபாட்டு நோய்கள் தடுப்பு தினமான அக்டோபர் 21ஆம் தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.