• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

கோவில்பட்டி ரயில்நிலையத்தில் கடலைமிட்டாய் விற்பனை அறிமுகம்..!

Byவிஷா

Jun 25, 2022

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில்நியைலத்தில், சோதனைமுறையில் 15 நாட்கள் கடலை மிட்டாய் விற்பனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே நிர்வாகம் சார்பில், ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷன்களிலும் அந்தந்த ஊர்களைச் சேர்ந்த பாரம்பரியமிக்க உணவு பண்டங்களை விற்பனை செய்வதற்கு, ‘ஒன் ஸ்டேஷன் ஒன் புராடக்ட்” எனும் திட்டத்தை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷனில், புவிசார் குறியீடு பெற்ற கடலை மிட்டாயை விற்பனை செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்தது.
இதையடுத்து, கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் தனியார் கடலை மிட்டாய் விற்பனை கடை மூலம் கடலை மிட்டாய் விற்பனை செய்வதற்கு கடை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, கடலை மிட்டாய் விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர் நலச் சங்க செயலாளர் கண்ணன், விற்பனை நிலைய உரிமையாளர்கள் மாரிச்சாமி, மணிசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து, கடலை மிட்டாய் உற்பத்தியளர்கள் சங்க செயலாளர் கண்ணன் கூறுகையில்,
கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்த பின் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. அண்மையில் தபால் நிலையங்கள் மூலம் கடலை மிட்டாய் விற்பனை செய்யும் திட்டம் துவங்கப்பட்டது. தற்போது, ரயில்வே ஸ்டேஷனில் கடலை மிட்டாய் விற்பனை துவங்கியுள்ளது. இதன் மூலம், கடலை மிட்டாய் விற்பனை மேலும் அதிகரிக்கும். ரயில்கள் மூலம் கோவில்பட்டிக்கு வரும் பயணிகளும், கோவில்பட்டியில் இருந்து வெளியூர்செல்பவர்களும் கடலை மிட்டாய் வாங்குவதற்காக பஸ் ஸ்டாண்ட் பகுதி மற்றும் மார்க்கெட் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.

ஆனால், தற்போது பொதுமக்கள், கோவில்பட்டி கடலை மிட்டாயை ரயில்வே ஸ்டேஷனிலேயே வாங்கிக் கொள்ளலாம். மேலும், கோவில்பட்டி வழியாக செல்லக் கூடிய பயணிகளும், கோவில்பட்டி கடலை மிட்டாயை ரயில்வே ஸ்டேஷனிலேயே வாங்கிச் செல்லலாம் என்றார்.