ஆண்டிபட்டி பேரூராட்சி வாக்குப்பதிவு முன்னேற்பாடுகள் தீவிரம். 31 வாக்குச் சாவடிகளுக்கு டிஎஸ்பி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன.
தமிழகம் முழுவதும் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆண்டிபட்டி பேரூராட்சி 18 வார்டுகளுக்கான தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆண்டிபட்டி பேரூராட்சியை ஆறு வார்டுகள் வீதம் 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒன்பது மையங்களில் 31 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்களுக்கு சீலிடப்பட்ட வாக்குப்பெட்டிகளை ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்திலிருந்து ஆண்டிபட்டி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தங்ககிருஷ்ணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாரின் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த வாக்குப் பெட்டிகள் செல்லும் வாகனங்களில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் வாக்குச்சாவடி அலுவலர்கள் உதவி அலுவலர்கள் உடன் சென்றனர்.
இதையடுத்து ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள 31 வாக்குச்சாவடி மையங்களிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . ஆண்டிபட்டி பேரூராட்சி தேர்தலுக்காக பிரத்தியேகமாக காவல்துறை வருவாய்துறை அடங்கிய மூன்று பறக்கும்படையினர் ரோந்துசுற்றி முறைகேடுகளை தடுக்க தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் . மேலும் 26,796 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ள ஆண்டிபட்டி உள்ளாட்சி தேர்தலை தேர்தல் அலுவலர் சின்னசாமிபாண்டியன் தலைமையிலான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர் .