ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்.19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் முடிந்த நிலையில், இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்.19-ம் தேதியன்று தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க, தொழில் நிறுவனங்களுக்கு தமிழக தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, தொழிலாளர் நலத்துறை செயலர் குமார் ஜயந்த், தொழிலாளர் ஆணையர் மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
‘‘வாக்குப்பதிவு நாளன்று தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், அரசு மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்களும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். மேலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பிபிஓ நிறுவனங்களும் தங்களது பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.
மேலும், இதுகுறித்து புகார் அளிக்க மாநில, மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகளை நிறுவி, அந்த கட்டுப்பாட்டு அறை எண்களை பொதுமக்கள் அறியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும்’’ என்று அறிவுறுத்தியுள்ளார்.