சீர்காழி அருகே மீனவ சமுதாயத்தை சேர்ந்த 6 குடும்பங்களை ஒதுக்கி வைத்த விவகாரம் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கீழ்மூவக்கரை மீனவ சமுதாயத்தை சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் அவரது சகோதரர்கள் 6 பேர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு வெண்கல நிலபடியை செய்து அதில் உபயம் என தங்களின் பெயர்களை பொறித்து காணிக்கையாக அளித்துள்ளனர்.
இந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன் கீழ்மூவக்கரை கிராம பொறுப்பாளர்கள் கோயிலுக்கு நிலபடி வழங்கிய ஜெயக்குமார் மற்றும் அவரது சகோதரர்கள் 6 பேர் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தும், இவர்களுடன் கிராம மக்கள் பேசக்கூடாது, பொது குழாயில் தண்ணீர் பிடிக்க கூடாது, இந்த 6 குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளுடன் மற்ற குழந்தைகள் விளையாடவும், பேசவும் தடை விதித்ததால் 6 குடும்பத்தினரும் மனதளவில் பெரிதும் பாதிக்கபட்டதாகவும், இது குறித்து கிராமத்தினரிடம் முறையிட்டும் அவர்கள் மீது விதிக்கபட்ட தடை நீக்கப்படாததால், சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
பின்னர் தங்கள் மீதுள்ள தடையை நீக்கக்கோரியும், தற்போது நடைபெற்று வரும் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என வட்டாட்சியர் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்ட மாநில மனித உரிமை ஆணையம், இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.