இந்தியாவில் தூய்மையான நகரமாக மத்திய பிரதேச இந்தூர் தொடர்ந்து 5வது முறையாக விருது பெற்றுள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும், நகரங்களின் தூய்மை, சுகாதாரம் மற்றும் தூய்மைப்பணிகள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தூய்மையான நகரங்கள் குறித்த கணக்கெடுப்பு 4,320 நகரங்களில், 28 நாட்கள், 4.2 கோடி பேரிடம் எடுக்கப்பட்டது.
இதில், ம.பி.,யின் இந்தூர் நகரம் முதலிடம் பிடித்தது. தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் இந்தூர் நகரம் முதலிடம் பிடித்து வருகிறது.
முதலிடம் பிடித்தது தொடர்பாக இந்தூர் நகர கலெக்டர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: தொடர்ச்சியாக 5வது ஆண்டாக தூய்மையான நகரம் விருது பெற்றதற்காக இந்தூர் நகர மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தூய்மை குறித்து மக்கள் இடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாகவே இது சாத்தியமானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இரண்டாவது இடத்தை குஜராத்தின் சூரத் நகரும், பீஹாரின் முங்கர் நகரும் பிடித்தது. ஆந்திராவின் விஜயவாடா 3வது இடத்தில் உள்ளது.
கடந்த ஆண்டு 3வது இடத்தை பிடித்த மஹாராஷ்டிராவின் நவிமும்பை இந்த ஆண்டு 4வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதற்கு அடுத்த இடங்களில் புதுடில்லி, அம்பிகா நகர், திருப்பதி, புனே, நொய்டா, உஜ்ஜயின் ஆகியன உள்ளன. இந்த நகரங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
ஒரு லட்சத்திற்கும் குறைவாக வசிக்கும் நகரங்களில், தூய்மை பட்டியலில் மஹாராஷ்டிராவின் விடா நகர் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் லோன்வாலா, சஸ்வத் ஆகியன உள்ளன. 100 உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கீழ் உள்ள மாநிலங்களில் தூய்மை பட்டியலில் ஜார்க்கண்ட் முதலிடத்திலும், ஹரியானாவும், கோவாவும் உள்ளன.
இதற்கான விருதுகளை, டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.