எல்லை தாண்டிய விவகாரத்தில் கைதான இந்தியரை 29 ஆண்டுகள் கழித்து சிறையிலிருந்து பாகிஸ்தான் விடுதலை செய்திருக்கிறது.
காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த குல்தீப் சிங் கடந்த 1992 ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் எல்லையைக் கடக்க முயன்றபோது பாகிஸ்தான் பாதுகாப்புப்படையினரால் கைது செய்யப்பட்டார்.
பின் , அவர் உளவாளி என விசாராணை நடைபெற்று இறுதியில் அந்நாட்டு நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறைவிதித்து கோட் லக்பாட் சிறையில் அடைத்தது. இதுகுறித்து குல்தீப் , ‘ எதிர்பாராத விதமாக எல்லையைக் கடந்த போது ராணுவத்தினர் என்னைக் கைது செய்து உளவாளியை விசாரிப்பது போது உடலில் மின்சாரம் செலுத்தியும், அடித்தும் கொடூரமான சித்தரவதைகளை மேற்கொண்டனர். இருந்தாலும் நான் நம்பிக்கையை விடவில்லை. இந்திய அரசின் முயற்சியால் 29ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டேன்’ எனத் தெரிவித்திருக்கிறார். வாகா எல்லை வழியாக கடந்த டிச.20ஆம் தேதி விடுதலையான குல்தீப் சிங்கின் குடும்பத்தினர் ,கிராமத்தினர் இனிப்புகளைப் பரிமாறி அவரை வரவேற்றனர்.
மேலும், சிறையில் தன்னுடன் இருந்த 10-க்கும் மேற்பட்ட இந்தியர்களை சித்தரவதை செய்ததால் அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதாகவும் இருநாடுகளும் மனிதாபியமான முறையில் நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய கோரிக்கை வைத்திருப்பதாகவும் குல்தீப் சிங் தெரிவித்திருக்கிறார்.